திங்கள், 17 ஜூன், 2013

கருவுற்ற பெண்கள் புளிப்பான பண்டங்களை விரும்புவது ஏன்...?

                             முதலில் நாம் கருவுறும் நிலையைத் தெரிந்துகொள்வது தேவையானது. உடலுறவின்போது ஆணின் விந்தணு பெண்ணின் பிறப்புறுப்பினுள் செலுத்தப்படுகிறது. பெண்ணின் கருப்பைக்குள் கருமுட்டை ஆயத்தநிலையில் இருக்கும்போது மட்டுமே விந்தணு பயன்படுத்தப்படும். இல்லையெனில் வீணாகிவிடும். பெண்ணின் கருமுட்டை உருவான நாளில் இருந்து பதினைந்து நாள்கள் வரை விந்தணுவிற்காக காத்திருக்கும். பதினைந்து நாள்களுக்கு பிறகு அது சிதைந்து வெளியேறிவிடும். இப்படி தொடர்ந்து கருமுட்டை சிதைவு நடைபெறும். கருமுட்டையானது முழுதும் நீரால் நிரப்பப்பட்டு விந்தணுவைப் பயன்படுத்தி உயிரை உருவாக்கத் தேவைப்படும் நொதிப்பொருள்களையும் கொண்டிருக்கும். அதில் நிறைந்துள்ள நீரானது கடல்நீரையொத்த செறிந்த உப்புக்களை உடையதாய் இருக்கும்.
                          கருமுட்டைத் திரவம் பற்றி காணும் முன் நாம் உலகின் முதல் உயிர்கள் உருவான கதையைப் பற்றி காண்போம். சூரியனில் ஏற்பட்ட சிதைவினால் புறந்தள்ளப்பட்ட ஒரு நெருப்புக்கோளமே இந்த புவிப்பந்து என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா? காலப்போக்கில் வெப்பம் குறைந்து குளிரத் தொடங்கிய புவிப்பரப்பில், ஆண்டுக்கணக்கில் மழை பொழிந்து கடல்கள் உருவாகின. அந்த கடல்களில் இருந்து தான் உலகின் முதல் உயிரினம், நமக்கெல்லாம் மூத்ததான அமீபா தோன்றியது. அதன்பின் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒருவொரு உயிர்களாகத் தோன்றின. இந்த உலகின் உயிர்களை உருவாகிய தாய், கடல் தான் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
                           உப்புத்தண்ணீராலான கடல் எப்படி உயிர்களை உருவாக்கியதோ, அதே சமன்பாடு தான் இப்போது வரை எல்லா உயிர்களுக்கும் பொருந்துகிறது(தாவரங்களுக்கும் இது பொருந்துமா என்பது ஆய்வுக்குரியது). கருமுட்டையில் இருந்து உருவாகும் எல்லா உயிர்களும் உப்புத்தண்ணீரில் தான் வளர்கின்றன. எல்லா தாய்களின் வயிற்றினுள்ளும் ஒரு கடல் உருவாகிவிடுகிறது. அடர்த்தி நிறைந்த உவர்த்தண்ணீர் உயிர் உருவாக ஏதுவாக அமைகிறது. அந்த உவர்த்தண்ணீர் உருவாகத் தேவையான உப்புச்சத்தை உடலில் இருந்துதான் பெறுகிறது. எப்போதும் உடல் ஒரு குறிப்பிட்ட அளவு உப்புச்சத்தைக் கொண்டிருக்கும். கருமுட்டை விந்தணுவைத் தனக்குள் உள்வாங்கிக்கொண்ட பின் கருமுட்டைக்கான உவர்ச்சத்தின் அளவு அதிகரிக்கும். அதனால் உடலில் இருந்து அதை பெற்றுக்கொண்டு வளர ஆரம்பிக்கும்.
                           உடலிலிருந்து உவர்ச்சத்து குறையும்போது அதன் தேவையை உணர்ந்து உவர்ச்சத்துள்ள பொருள்களை உண்பதற்கு நாக்கு விருப்பும். புளிப்பான, உவர்ப்பான பண்டங்களைக் கருவுற்ற பெண்கள் விரும்பி உண்பதற்கு இதுவே காரணமாக அமைகிறது. இது அந்த பெண்களுக்கே தெரியாமல் இருக்கக்கூடும். அவர்களிடம் கேட்டால் "தின்ன வேண்டும்போல் தோன்றுகிறது. அதனால் தின்கிறோம். மற்றபடி எதற்கு என்றெல்லாம் தெரியாது!" என்பர். ஏனென்றால் தெரிந்தால் தானே அவர்களால் சொல்ல முடியும்? தெரிந்துகொள்வது தான் அறிவு! அதை விளக்குவது தான் அறிவியல்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக